கொடைக்கான‌ல் வ‌ட்டக்கான‌ல் அருகே வனத்துறையினரால் தடை செய்ய‌ப்ப‌ட்ட‌ ரெட்ராக் ப‌குதியில் செல்பி எடுக்க‌ முய‌ன்ற‌ ம‌துரையை சேர்ந்த‌ இளைஞர் மாய‌ம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து 8 நபர்கள் கொண்ட இளைஞர் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர், இதனையடுத்து இன்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த இளைஞர் குழுவினர்  வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த பகுதி மலைமுகடுகள் நிறைந்த பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிப்ப‌துட‌ன், ஆபத்தான பள்ளத்தாக்குக‌ள் நிறைந்த‌ பகுதியாகும்.

இந்த பகுதியை கண்டு ரசித்த பின்  இளைஞர் குழுவினர் இதே பகுதியில் அம‌ர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  மது அருந்திவிட்டு இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர். இந்நிலையில் ராம்குமார்(32) என்ற இளைஞர் ம‌ட்டும் பாறையின் நுனி பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற போது நிலை தடுமாறி  சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்து மாயமானதாக கூறப்படுகிறது. மாயமான இளைஞரை உடன் வந்த இளைஞர்கள் நீண்ட‌ நேர‌ம் தேடியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து மாயமான இளைஞரின் நண்பர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அடிப்படையில் வந்த காவல்துறையினர் இளைஞர் மாயமான இடத்தையும் உடன் வந்த இளைஞர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அனைவரும் ம‌து போதையில் இருந்ததாகவும் செல்பி எடுக்கும் போது ராம்குமார் தவறி விழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரெட்ராக் பகுதியில் அடர் பனிமூட்டம் நிலவுவதால் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு,நாளை காலை முதல் மாயமான இளைஞரை தேட உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா வ‌ந்த‌ இளைஞர் இந்த பகுதியில் மாயமான ச‌ம்ப‌வ‌ம் வட்டக்கானல் பகுதியில் பரபரப்பினை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *